பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம்
பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் விரல் அகற்றப்பட்டது என்று வெளியான செய்தியானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.
சூப்பர் குட் பிலிம்ஸில் மேனேஜராக பாவா லட்சுமணன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சரத்குமார் நடித்திருந்த மாயி என்ற படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து ‘வாம்மா மின்னல்’ என்ற வசனத்தை பேசி ரசிகர்களிடைய நீங்காத இடம் பிடித்தவர்.இன்றளவும் அப்படத்தில் உள்ள அந்த டயலாக் பலராலும் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் நடித்து தனது திறமையை வெளிபடுத்திய இவர் சமீப காலமாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
சமீபத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய இவர் தனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் இப்பொழுது உள்ள படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகிறது எனவும், தன்னை போன்ற பல நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பு வருவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே தான் இறந்துவிட்டதாக வெளியான பொய்யான தகவலை அறியாமல் சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்களும் தனக்கு போன் செய்து விசாரித்தனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாவா லட்சுமணன் சர்க்கரை வியாதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.நோயின் தாக்கம் அதிகமானதால் அவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலங்களில் இவரை போன்று பல நடிகர்கள் மருத்துவ செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து வரும் நிலை அதிகரித்துள்ளது. இது போன்ற செய்திகளும் அவ்வப்போது வெளியாகி உள்ளது. மேலும் வறுமையில் வாடும் இவருக்கு திரையுலகினர் உதவி செய்திட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.